Saturday, April 30, 2016

 
 


 
கோவையில் தமிழகத்தின் மிகமுக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான மலைப்பாதையை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வருகின்றனர். இந்த கோயிலைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வெள்ளியங்கிரி மலை : தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கிறது.

இந்த வெள்ளியங்கிரி மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.

கயிலாய மலையை போன்றே இந்த வெள்ளியங்கிரி மலையிலும் சிவ பெருமான் வீற்றிருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையில் ஒரு குகையினுள் சுவயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.
இந்த வெள்ளியங்கிரி மலையில் மொத்தம் ஏழு குன்றுகள் இருக்கின்றன. இவற்றை கடந்தே நம்மால் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும். இந்த மலைப்பாதை சவால் நிறைந்த ஒன்று என்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தாக்கும் விலங்குகள் வாழும் பகுதியாகவும் இருக்கிறது.

இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் தென் கயிலாயம் எனப்படும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது.
 
இந்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வர பிப்ரவரி முதல் ஜூன் மே மாதம் வரையிலான காலகட்ட்டம் உகந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சித்திரா பௌர்ணமி பண்டிகையின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர். தை முதல் தேதியில் இருந்து வைகாசி விசாகம் வரை செல்லாம் ...
 
12 - 45 வயதுடைய பெண்கள் இந்த மலையின் மீது ஏற அனுமதியில்லை. மலையேற ஏற ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் சுவாச கோளாறு இருப்பவர்கள் இந்த மலையேற்றத்தை தவிர்ப்பது நல்லது. இங்கே அவசர உதவி கிடைக்க தாமதமாகும் என்பதால் மலையேறுபவர்கள் சில அவசர கால மருந்துகளையும் தங்களுடன் எடுத்து செல்வது சிறந்தது. 
 
கோயம்பத்தூர் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு காந்திபுரத்தில் இருந்து தினசரி நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மஹாசிவராத்தி,சித்திரை பௌர்ணமி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
 
இங்கே மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சுற்றுவட்டாரப்பகுதியில் தங்கும் விடுதிகள் எங்கும் இல்லை என்பதால் இந்த அடிவார கோயிலிலேயே பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.

வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்றாகும். படந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தன் கரம் பரப்புவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஏறுவதை விடவும் இறங்குவது இந்த வெள்ளியங்கிரி மலையில் மிகவும் கடினமான காரியமாகும். இறங்கும் போது நிலைதவறி கீழே விழுந்துவிடாமல் இருக்கும் மலையேறும் பக்தர்கள் அனைவரும் மூங்கில் கம்பு ஒன்றை உடன் கொண்டு செல்கின்றனர்.
 
குறிப்பிட்ட சில மாதங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தோன்றும் காட்டாறுகள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றினால் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவது உயிருக்கே ஆபத்தான விஷயமாக முடியும்.
 
இந்த மலையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் அரூபமாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது. இதனால் மலையேறும் போது கூடுமானவரை சத்தம் போடுவதை தவிர்க்கப்பாருங்கள். 

பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கவும் வனபகுதி மாசு அடையாமல் 
பாதுகாப்போம் .. காட்டு தீ பரவாமல் இருக்க நெருப்பு பொருட்கள் இல்லாமல் இருப்போம் ..
 
இயற்கையும் ஆன்மீகமும் உங்களுக்கு மிகவும் விருப்பமானவை என்றால் நிச்சயம் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தாருங்கள். வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அது நிச்சயம் அமையும்.

 
 





Thursday, November 13, 2014

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை.

வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள். எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும்.

அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.

மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள்.

அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.

எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, ஒரு வழி மூடினால் வேறு வழி திறக்கும் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.

ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள். வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள்.

இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும்.

இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!